Tuesday, October 14, 2014

மளிகைக்கடை வைத்த ஓவியர்

மளிகைக்கடை வைத்த ஓவியர்
நான் பத்திரிகை துறையில் பிழை திருத்துபவனாக பணியை ஆரம்பித்தேன். இது தற்காலிகம்தான். எப்படியாவது ஓவியனாகிவிட்டால் போதும். ஓவியர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. மற்றவர்களைவிட கைநிறைய சம்பாதிக்கலாம் என்று மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அந்த வாய்ப்பும் வந்து சேர்ந்தது. அதன்பிறகு சென்னைக்கு வந்து, சீனியர் ஓவியரிடம் நன்றாக பழகிய பிறகு அவரது சம்பளத்தை கேட்டேன். அவர் சம்பளத்தை சொன்னதும் சீட்டுக்கட்டுபோல என் ஆசையெல்லாம் அப்படியே சரிந்துவிழுந்தது.

அவர் சுமார் 25 ஆண்டுகளாக பத்திரிகையில் ஓவியராக பணி புரிந்து வருகிறவர். அவரே இவ்ளோதான் வாங்குகிறாரா..  சரிதான் நாம ஏமாந்து போய்விட்டோம் என்று மனதை தேற்றிக்கொண்டேன். அந்த சீனியர் திடீரென ஒருநாள் நான் இந்த வேலையை விட்டு செல்கிறேன். பெட்டிக்கடை வைக்கப்போகிறேன் என்றார். பெட்டிக்கடை வைக்கவும் அனுபவம் வேணும் சார் என்றேன். அதெல்லாம் உறவினர் இருக்கிறார்கள் கற்றுக்கொள்ளலாம் என்று துணிவோடு சென்று, சொன்னது போலவே சின்னதாக ஒரு மளிகைக்கடைக்கு ஓனர் ஆகியும் விட்டார் என்பது வேறுகதை. என்னை நல்லா கவனிச்சுக்கோங்க... இல்லேன்னா பெட்டிக்கடை வைக்கப் போயிட்டான்னு ஃபீல் பண்ண வேண்டியிருக்கும். சொல்லிட்டேன்...

Tuesday, July 22, 2014

சிரிக்கக் கூடாது

மித வேகம் மிக நன்று
அன்புள்ள தோழர்களே... எனது எக்செல் சூப்பரில் சென்னையில் உள்ள பிரதான சாலையில் வேகமாகவே சென்று கொண்டிருந்தேன். அப்போது அதைவிட வேகமாக ஒருவர் டூவீலரில் என்னை கடந்து சென்றார். அதைப் பார்த்து அப்படியே ஷாக் ஆகிவிட்டேன். அதனால் வந்ததுதான் இந்த எச்சரிக்கை பதிவு.

டூவீலரில் செல்லும்போது கொஞ்சம் நிதானத்தை கடைபிடியுங்கள். நமது உடல் ஒன்றும் உடையாத எஃகு போன்றதால் ஆனதில்லை. ஒரு எலும்ப முறிவு என்றாலும் ஒருமாதம் ஓய்வு எடுக்க வேண்டியதிருக்கும்.
அதுவும் அந்த நபர் என்னை கடந்து செல்லும்போது ‘டிரிங்.. டிரிங்...‘ என்று பெல் அடித்து சென்றது என் காதுகளிலே இன்னும் ‘டங்... டங்..’ என்று ஒலித்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் சொல்கிறேன் வேகத்தை குறைப்போம்.. உயிரை காப்போம்.

Friday, June 20, 2014

பறவை காதல்

எங்கள் கிராமத்தையொட்டி அமைந்துள்ளது, தேரிமணல் குன்றுகள். பாலைவனம் போல் இருந்தாலும் அவற்றிற்கு ஏற்ற தாவர வகைகளும் நிறைய இருக்கும். என் சின்ன வயதில் அங்கு பறவைகளும் நிறைய இருந்தன. சின்ன வயதிலேயே பறவைகள் மீது இருந்த ஆர்வத்தால் அவற்றை ரசிக்க செல்வேன்.

ஒருமுறை ஒரு புளியமரத்தின் பக்கம் சென்ற போது ‘கீச் கீச்‘ குரல் காதில் தேனாக பாய்ந்தது. அந்த கூட்டினை பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொண்டது. உடனே மறைந்திருந்து கவனித்தேன். தாய் பறவை உணவை ஊட்டும்போது மட்டும்தான் குஞ்சுகள் கத்தும். அது வெளியே பறந்தவுடன் அமைதியாகிவிடும். சிறு பொந்தில் இருந்து தாய் பறவை மின்னல் வேகத்தில் வெளியேறிவிடும். அப்புறம் அதன் கூட்டினை எப்படி கண்டுபிடிப்பது. அதற்கே நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் அந்தப் பறவை எந்த மரத்தில் இருந்து பறந்து செல்கிறது என்று கவனிக்க வேண்டும். அடுத்து எந்த கிளை... இப்படி நெருங்கி மறைந்திருந்து பார்த்து அடுத்த முறை உணவோடு வரும் தாய் பறவை எந்த பொந்தில் நுழைகிறது என்று கண்டுபிடித்தேன்.

அப்புறம் என்ன? மரத்தில் மளமளவென ஏறிவிட்டேன். அந்த பொந்து இருந்ததோ உயரமான கிளையின் நுனி பகுதி. பார்த்துவிட வேண்டும் என்று துடிப்பில் நெருங்கி சென்று விட்டேன். எட்டிப் பார்த்தால் அந்த பொந்து நீண்டு கொண்டே சென்றது. யாரோ எதிரி என்பதை உணர்ந்த குருவி குஞ்சுகள் அடியில் சென்று பதுங்கிக் கொண்டன. எப்படி பார்ப்பது என்று யோசித்தேன். புளிய மர இலைகளை கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்து உதிர்த்து அந்த பள்ளத்தை நிரப்பினேன்.  குருவி குஞ்சுகள் மெல்ல மெல்ல மேலே வந்தன. சிறிது நேரம் ரசித்துவிட்டு இறங்கிச் சென்றேன்.

Thursday, May 22, 2014

சரியா தவறா?




முதல் மார்க் வாங்குபவர்களை தலைக்கு மேல் தூக்கிவைத்து கொண்டாடும் வரையில்,
தேர்வில் வெற்றி வாய்ப்பை இழக்கும் மாணவர்களுக்கும், குறைவான மார்க் எடுக்கும் மாணவர்களுக்கும் தைரியம் சொல்பவர்கள் இருக்கத்தான் செய்ய வேண்டும். 

(கடோசி பெஞ்சில் கடோசி மார்க் வாங்குவோர் சங்கம்)

hi hi


“நாம ஸ்டேட்டஸ் போட்டபோது நிறைய லைக் விழுந்தது. நிறைய பாராட்டி கமெண்ட்ஸ் வந்தது. அப்புறம் எப்படி ஓட்டு குறைஞ்சது?”

“நமக்கு லைக் போட்டதெல்லாம் ஃபேக் ஐடி யாம்.”